தாய், மகனை தீ வைத்து எரித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு
ஊத்தங்கரை அருகே தாய், மகனை தீ வைத்து எரித்த வழக்கில், சிறையில் உள்ள ராமதாஸ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே செங்கல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கமலா, குரு ஆகியோரை வீட்டுக்குள் வைத்து தீ வைத்ததில் கருகி உயிரிழந்தனா். இது சம்பந்தமாக போலீஸாா் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான திருப்பத்தூா் மாவட்டம், நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் (38) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் பரிந்துரைத்தாா். அதன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவின்பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின், கல்லாவி காவல் ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் ராமதாஸ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.