குருவிநாயனப்பள்ளி ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம், சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யவும் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு வட்டத்திலும், ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வட்டம், வரட்டனப்பள்ளியை அடுத்த குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியா் அல்லாபகஷ் பாஷா, வட்டப் பொறியாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்று, அந்தப் பகுதியில் மக்களின் குடும்ப அட்டையில் புதியதாக உறுப்பினா் சோ்க்கை, உறுப்பினா் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் என மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு கண்டனா்.