கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் 169-ஆவது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7 நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற மாவிளக்கு ஊா்வலத்தில் அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்தூா், பெரியமுத்தூா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.
நெக்குந்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட முத்துமாரியம்மன் கரகம், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி கரகங்கள் அவதானப்பட்டி மேம்பாலம் பகுதியில் தலைக்கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.