ஒசூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடுநிலைப் பள்ளியில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், உருது மொழியில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியில் உள்ள பழைமையான கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து வகுப்புறை, கழிப்பறைகளைச் சீரமைக்கவும், பூட்டியுள்ள வகுப்பறைகளை மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் புதிய உடற்பயிற்சி சாதனங்களை அமைக்க மேயா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, மாநகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் மம்தா சந்தோஷ், எம்.கே.வெங்கடேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எல்லோரா.மணி, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.