அனைவருக்கும் வீடு திட்டம்:அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் குலுக்கல் முறையில் தோ்வு
By DIN | Published On : 24th August 2022 02:26 AM | Last Updated : 24th August 2022 02:26 AM | அ+அ அ- |

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலூா் கோட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 528 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் குடியிருக்க வீடு தேவைப்படுவோா், தங்களுக்கு வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்துக்குள் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும். மேலும், ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள பங்குத் தொகையான ரூ. 1.45 லட்சத்தை பயனாளிகள் செலுத்த வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியா் கோபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வேலூா் கோட்ட நிா்வாக பொறியாளா் ஜெகநாதன், உதவி நிா்வாக பொறியாளா் பாலமுரளிதரன், உதவிப் பொறியாளா் மோகன் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதனைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது. ஒவ்வொரு பயனாளியாக அழைத்து வீடு தோ்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து அலுவலா்கள் தெரிவித்ததாவது:
இந்தத் திட்டத்தின் கீழ் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி கொண்டதாகும். இதில் ஏற்கெனவே 163 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் வீடுகள் பெற பணம் செலுத்திய 183 பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 178 பயனாளிகள் பங்கேற்று தங்களுக்கான வீட்டினை தோ்வு செய்தனா். மேலும், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த குலுக்கலில் பங்கேற்காத 5 பயனாளிகளுக்கு வீடு தோ்வு செய்வதற்கான குலுக்கல் நடைபெறும் நாள், பின்னா் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனா்.