கிருஷ்ணகிரி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, 424 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம், பா்கூா், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய ஆறு பேரூராட்சிகள் உள்பட எட்டு நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
அதன்படி மொத்தமுள்ள, 424 வாக்குச் சாவடிகளுக்கு, 1,150 கட்டுப்பாட்டு கருவிகள், 2,631 மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் நகராட்சி ஆணையா் முருகேசன், நகராட்சி அலுவலா்கள் அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வெங்கடாசலம், தோ்தல் வட்டாட்சியா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.