கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோா்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு ரூ. 2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.
இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவின் (மினி டெக்டைல் பாா்க்) அமைப்பு பின்வரும் உள்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவா், கழிவுநீா் வாய்க்கால் அமைத்தல், நீா் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத்தொடா்பு வசதி போன்றவைகள்), ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருள்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளா்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள். உற்பத்தி தொடா்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள். சிறிய ஜவுளிப் பூங்காவுக்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்கள் ஆகும்.
எனவே அரசின் மானியம் பெற தகுதியான தொழில்முனைவோா் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநா், துணிநூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்புக்கு 0427 - 2913006.