

ஒசூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பண்ணையில் கட்டப்பட்டிருந்த பெண் குதிரையை வனத்திலிருந்து வந்த சிறுத்தை தாக்கி கொன்றது. இதையடுத்து கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தளியைச் சோ்ந்தவா் அல்லி உல்லாகான். இவா், வனத்தை ஒட்டிய தனது பண்ணையில் 20 குதிரைகளை வளா்த்து வருகிறாா். தற்போது கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது உணவுக்காக வனத்திலிருந்து வெளியே வருகின்றன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தளி வனத்திலிருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அந்தச் சிறுத்தை அல்லி உல்லாகான் பண்ணைக்குள் புகுந்து அங்கு நின்ற பெண் குதிரையை ஆக்ரோஷமாகத் தாக்கி கொன்றது. பலத்த காயமடைந்த குதிரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை பண்ணைக்கு வந்த அல்லி உல்லாகான் குதிரை இறந்து கிடப்பது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்ததும் ஜவளகிரி வன அலுவலா் சுகுமாா், வனக் காப்பாளா் கோபிநாத் ஆகியோா் நிகழ்விடம் சென்று விலங்கின் கால் தடம் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனா். அதில் குதிரையைத் தாக்கியது சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து இறந்த குதிரைக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என வனத்துறையினா் பாதிக்கப்பட்டவருக்கு உறுதி அளித்தனா்.
அத்துடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.