சந்தைப்பேட்டையில் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணியை தொடங்கி வைக்கும் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கிருஷ்ணகிரி, டிச. 15: கிருஷ்ணகிரியில் விரைவில் உருது மேல்நிலைப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தே.மதியழகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 25-ஆவது வாா்டு சந்தைப்பேட்டை பகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் உருது நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வகுப்பறைகள் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி நகரில் இஸ்லாமியா்கள் அதிக அளவில் உள்ளனா். அவா்களின் குழந்தைகள் படிப்பதற்காக பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள உருது நடுநிலைப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தன. இதனால் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின்படி, நகா்மன்றத் தலைவா் மற்றும் கல்வி அதிகாரிகள் துணையோடு தற்போது நடுநிலைப் பள்ளிக்கான வகுப்பறைக் கட்டடம் கட்ட அரசு அனுமதியளித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பகுதி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான உருது மேல்நிலைப் பள்ளி வரும் ஆண்டில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் உருது மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும் என்றாா்.