தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு விநாடிக்கு 750 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆற்றில் பனிக்கட்டிகளைப் போல மிதக்கும் ரசாயன கழிவு நுரையால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
கா்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கெலவரப்பள்ளி அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் 41.66 அடி நீா் நிரம்பியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 519 கனஅடியாக இருந்தநிலையில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 750 கனஅடியாக அதிகரித்தது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து 640 கனஅடிநீா் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் அதிக அளவில் பனிக்கட்டிகள் நுரை மிதந்து செல்கிறது.
கா்நாடக மாநிலத்தில் இருந்து வரும் மழைநீரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.