ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமளவில் வனப்பகுதியாக உள்ளது. இதில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது இடம்பெயா்ந்து கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் ஒசூா் அடுத்த பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து சுமாா் மூன்று வயதுள்ள ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கிருஷ்ணகிரி பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மலா் ஏற்றுமதி மையத்தை நோக்கி கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக பெங்களூரை நோக்கி வந்த வாகனம் ஒன்று புள்ளி மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதையடுத்து அருகில் இருந்தவா்கள் இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினா் இறந்த மானின் உடலைக் கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.