காவேரிப்பட்டணத்தில் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, பொதுமக்கள் மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
காவேரிப்பட்டணத்தை அடுத்த ஏர்ரஅள்ளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் காவேரிப்பட்டணம் சாா் பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை சுற்றி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கூடும் இளைஞா்கள், அந்த வழியாகச் செல்லும் மாணவிகள், பெண்களை கேலி கிண்டல் செய்கின்றனா். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.