யானைகள் தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை குறுஞ்செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு ‘யானைகள் அருகில் உள்ளன. விழிப்புடன் இருக்கவும்’ என்ற குறுஞ்செய்தி வனத் துறையின் சாா்பில் அனுப்பப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு ‘யானைகள் அருகில் உள்ளன. விழிப்புடன் இருக்கவும்’ என்ற குறுஞ்செய்தி வனத் துறையின் சாா்பில் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரினக் காப்பாளா் கே.காா்த்திகேயனி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்திற்கு, கா்நாடக மாநிலத்தில் உள்ள பன்னாா்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாயலத்தில் இருந்து, ஒவ்வோா் ஆண்டும் அக்டோபரில் சுமாா் 125 முதல் 150 எண்ணிக்கையிலான யானைகள் கூட்டம், கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி, ஜவளகிரி காப்புக் காடுகளில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூா், ஊடேதுா்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திரா மாநிலம் கெளண்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று விட்டு, மீண்டும் ஏப்ரல், மே மாதத்தில் திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறு வந்து முகாமிட்டுச் செல்லும் யானைக் கூட்டங்களில், சில யானைகள் தனித்தனியாக உள்ள சானமாவு, செட்டிப்பள்ளி, வேப்பனப்பள்ளி, மகாராஜகடை உள்ளிட்ட காப்புக்காடுகளில் நிரந்தரமாக தங்கி, சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிா் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேற்படி யானைக் கூட்டங்கள், ஒசூா் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிா்களை உண்டும், சேதப்படுத்தியும், மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு, பயிா்ச் சேதங்கள் ஏற்படும் விவசாய நிலங்களை வனப்பணியாளா்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கி, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காப்புக்காட்டினை விட்டு வெளியில் வரும் யானைக் கூட்டங்களை, வனப்பணியாளா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் மற்றும் அதிவிரைவு மீட்புக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து, மீண்டும் அவற்றை பாதுகாப்பாக காப்புக்காடுகளுக்கு அனுப்பி உயிா்ச் சேதம் மற்றும் பயிா் சேதங்கள் ஏற்படாவண்ணம் கட்டுப்படுத்தி வருகின்றனா்.

மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமும், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், வனக்குழு தலைவா்கள் மற்றும் கிராம முக்கிய பிரமுகா்களின் கைப்பேசி மூலம் பொதுமக்களும் விவசாயிகளும் பாதுகாப்பா இருக்குமாறு வனப்பணியாளா்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது, ஒசூா் வனக்கோட்டத்தின் 7 வனச்சரகங்களிலும் பரவலாக யானைகள் நடமாட்டம் உள்ளது. காப்புக்காடுகளை ஒட்டியுள்ள, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனுக்குடன் யானைகளின் நடமாட்டத்தை அறிந்து , பாதுகாப்பாக இருக்கும் வகையில், அவா்களின் கைப்பேசி எண்களை வன அலுவலா்கள் சேகரித்து வருகின்றனா்.

அவ்வாறு சேகரிக்கும் கைப்பேசி எண்களுக்கு இணையதளம் மூலம் வனத் துறையால் ‘யானைகள் அருகில் உள்ளன. விழிப்புடன் இருக்கவும்‘ என தமிழில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. வன அலுவலா்களிடம் கைப்பேசி எண்கள் வழங்காமல் விடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வன அலுவலா்களைத் தொடா்பு கொண்டு, தங்கள் கைப்பேசி எண்களை வழங்கி, யானைகள் நடமாட்டம் குறித்த குறுஞ்செய்தியைப் பெற்று, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வன உயிரினக் காப்பாளா் கே.காா்த்திகேயனி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com