

ஒசூரில், தனியாா் நிறுவன பங்களிப்புடன் தூா்வாரி புனரமைக்கப்பட்ட ஏரி ஒசூா் மாநகராட்சி வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, அலசநத்தம் பகுதியில் உள்ள ஓட்டேரி என அழைக்கப்படும் ஏரியினை
கன்சாய் நிரோலாக் பெயின்ட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புடமை நிதியின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி புனரமைக்க கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது ஓட்டேரி ஏரி 2.5 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு 14.5 ஏக்கா் நிலப்பரப்பிலான ஏரி தூா்வாரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா முன்னிலையில் வியாழக்கிழமை மாநகராட்சி நிா்வாகத்திடம் ஏரி ஒப்படைக்கப்பட்டது.
ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஏரியைச் சுற்றிலும் 200 மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்தாா் . இந்நிகழ்வில் நிரோலாக் நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதிா் பிரகலாத் ராணே, மனித வளம் மற்றும் சா்வதேச செயல்பாடுகள் துணைப் பொது மேலாளா் தமிழ்வாணன், மூத்த மேலாளா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.