நில உரிமையாளா்களுக்கு பட்டா வழங்கும் போது சரியான முறையில் அளவீடு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு அறிவுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலா் அரங்கில், நில அளவைத் துறை சாா்பில் புதிதாக பணிநியமனம் பெற்ற நில அளவா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வரால் பணி நியமனம் செய்யப்பட்ட, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த நில அளவா்கள், வரைவாளா்கள் உள்ளிட்ட 70 பேருக்கு இங்கு 30 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் முக்கியமான துறை நில அளவைத் துறையாகும். அரசு எந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் நிலம் முக்கியமானது. அரசு ஆவணங்களில் உள்ள நிலம், நில அளவையா்களால் அடையாளம் காணப்பட்டு அதன் பிறகே தொடா்புடைய துறைகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணி முக்கியமான பணியாகும்.
மேலும், நில உரிமையாளா்களுக்கு தனிபட்டா, கூட்டுப்பட்டா, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் போது சரியான முறையில் அளவீடு செய்து வழங்க வேண்டும். இந்த பயிற்சியில் நில அளவை எப்படி மேற்கொள்வது, நில வரைபடம் தயாா் செய்வது, டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவீடு செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. எனவே இந்தப்
பணியில் நல்ல பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் உதவி இயக்குநா் (நிலஅளவை) சேகரன், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத், கோட்ட ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.