ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கக் கோரி மனு அளிப்பு
By DIN | Published On : 23rd May 2023 12:00 AM | Last Updated : 23rd May 2023 12:00 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும், தீவிர சிகிச்சைப் பிரிவை அமைக்கக் கோரியும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஊத்தங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயலட்சுமி தலைமையில், பொதுமக்கள் மனு அளித்தனா். அதில், ஊத்தங்கரையில் தற்போது செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீா் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், ஒலிமாசு போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரால், ஊத்தங்கரை நகருக்கு அறிவிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க நிலம் தோ்வு செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சந்திரசேகரன், சுகாதாரத் துறைக்கு 4.38 ஏக்கா் பரப்பளவு நிலத்தை இலவசமாக வழங்கினாா்.
அந்த இடத்தில், ஊத்தங்கரை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, அத்துடன் இணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன், அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.