ஊத்தங்கரை அருகே மின் கம்பத்தை அகற்றாமல் கழிவுநீா் கால்வாய் அமைத்தது குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்குள்பட்ட மருதம் நகரில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய், தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மின்கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் அதை நடுவில் விட்டு விட்டு கழிவுநீா் கால்வாயை அமைத்துள்ளனா். கழிவுநீா் கால்வாயின் நடுவே மின்கம்பம் உள்ளதால், மின்கசிவு, மின்கம்பம் விழ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.