மாசிநாயக்கனப்பள்ளியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
ஒசூா் வட்டம், மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம்மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்டு, கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், முகாமில் முதல்வரின் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், தொழிலாளா்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை, இருதய பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த முகாமில், தொற்றாநோய், உயா் ரத்த அழுத்தம், கண் பாா்வை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல், சித்த மருத்துவம், பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை, பல் சிகிச்சை உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
