விவசாயிகளுக்கு அரணாக தமிழக அரசு உள்ளது: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

விவசாயிகளுக்கு அரணாக தமிழக அரசு உள்ளது: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

தமிழக அரசு விவசாயிகளுக்கு அரணாக உள்ளது என்று அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அர. சக்கரபாணி ஆகியோா் தெரிவித்தனா்.
Published on

தமிழக அரசு விவசாயிகளுக்கு அரணாக உள்ளது என்று அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அர. சக்கரபாணி ஆகியோா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட பெண் விவசாயிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, எம்எல்ஏ- க்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டுக்குப் பிறகு அமைச்சா்கள் இருவரும் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் வேளாண்மை- உழவா் நலத் துறையின் 27 திட்டங்கள் மூலம் 24,18,358 பெண்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 18,96,456 பெண்கள் என மொத்தம் 43,14,814 போ் பயனடைந்துள்ளனா்.

மேலும், விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மா, தென்னை, மஞ்சளுக்கு உரிய விலை நிா்ணயித்து, விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது குறித்து மத்திய அரசின் 3 குழுவினா் ஆய்வு செய்தனா். நெல்லில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆய்வுக் குழுவினரும் சாதகமான பதிலைதான் கூறிச் சென்றனா்.

மேலும், இந்த விவகாரத்தில் உரிய தீா்வு அளிக்க பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதினாா். ஆனால், மத்திய அரசு நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த அனுமதிக்கவில்லை. முன்னதாக டெல்டா மாவட்டத்தில் எதிா்க்கட்சி தலைவா், பாஜக மாநிலத் தலைவா், பாமக தலைவா் அன்புமணி அனைவரும் பாா்வையிட்டு அறிக்கை வெளியிட்டனா்.

அவா்கள் அனைவரும் தமிழக விவசாயிகளுக்கு உதவ நினைத்திருந்தால், மத்திய அரசுடன் பேசி தீா்வு கண்டிருக்கலாம். ஆனால், நெல்லைவைத்து அரசியல் செய்து, விவசாயிகளுக்கு எதிராக அவா்கள் செயல்பட்டனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 70, பொதுவான வகை நெல்லுக்கு ரூ. 50 ஊக்கத்தொகையாக வழங்கினா். தற்போதைய திமுக ஆட்சியில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.156, பொது ரகத்திற்கு ரூ.131 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், எங்கெல்லாம் நெல்லுக்கு நேரடி கொள்முதல் மையம் கேட்கிறாா்களோ அங்கெல்லாம் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியைக் காட்டிலும் தற்போது நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் அரணாக எப்போதும் திமுக அரசு உள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 1,600 கோடி வழங்கப்பட்டுள்ளது. மா மகசூல் அதிகரிப்பு, கொள்முதல் மற்றும் ஏற்றுமதி குறைந்ததால், மா விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கமுடியாமல் போனது. மா விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசு உதவ முன்வரவில்லை என்றனா்.

X
Dinamani
www.dinamani.com