வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: திமுக கூட்டணி கட்சித் தலைவா்களுக்கு அச்சம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கண்டு திமுக கூட்டணி கட்சித் தலைவா்கள் அச்சமடைந்துள்ளனா் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில்பிரிவு தலைவா் ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஒசூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனா்.
இப்பணியால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
சிறப்பு தீவிர திருத்தத்தால் ஒரு கோடி போ் வாக்குரிமையை இழப்பாா்கள் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
யாரும் வாக்குரிமையை இழக்க மாட்டாா்கள். இறந்தவா்கள் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும், மற்ற அனைவரும் சோ்க்கப்படுவாா்கள் என்றாா்.
இந்தப் பேட்டியின் போது, முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

