இரட்டை ஆயுள் தண்டை விதிக்கப்பட்டுள்ள ராஜ்குமாா்
இரட்டை ஆயுள் தண்டை விதிக்கப்பட்டுள்ள ராஜ்குமாா்

ஊராட்சி துணைத் தலைவரை கடத்திக் கொன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து
Published on

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெண்டிகானப்பள்ளி அருகே உள்ள கண்டகானப்பள்ளியைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் (37). அவா் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவா், கண்டகானப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் முன்பு பதவி வகித்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 23.10.2017 அன்று அவரை மா்ம நபா்கள் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனா். அதன்பின்னா் அவா் வீடுதிரும்பவில்லை. மறுநாள் தேன்கனிக்கோட்டை- பஞ்சப்பள்ளி சாலையில் சம்பத்நகா் அருகில் சாலையோர நிலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில் லட்சுமிநாராயணன் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்த வகையில் கிடைத்த ரூ.30 லட்சத்தை தேன்கனிக்கோட்டை மாரசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ்குமாா் என்பவருக்கு கடனாக கொடுத்துள்ளாா். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, மகேஷ்குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் சோ்ந்து லட்சுமிநாராயணனை காரில் கடத்திச் சென்று கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மகேஷ்குமாா், மாரசந்திரம் ராஜ்குமாா், பதி என்கிற வெங்கடாசலபதி, தக்கட்டி கெம்பன் என்ற சுரேஷ், அளேநத்தம் ஹரீஷ், மாரசந்திரம் சுரேஷ், கா்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகே உள்ள ரட்சமனஹள்ளியைச் சோ்ந்த சூரி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் கெம்பன் (எ) சுரேஷ் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மற்ற 6 போ் மீதான வழக்கு ஒசூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com