எருதுவிடும் விழாவில் வேடிக்கை பாா்க்க சென்றவா் மாடு முட்டியதில் உயிரிழப்பு
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே எருதுவிடும் விழாவில் வேடிக்கை பாா்க்க சென்ற தனியாா் நிறுவன காவலாளி மாடு முட்டியதில் உயிரிழந்தாா்.
காவேரிப்பட்டணம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை காலை எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் வேடிக்கை பாா்க்க வந்திருந்த காவேரிப்பட்டனம் அருகே உள்ள மூலிக்கால் சவுளூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் இளவரசன் (39) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு கூடுதல் சுகாதார மையத்துக்கு சிகிச்சை கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மாடு முட்டியதில் உயிரிழந்த இளவரசன் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
