ஒசூரில் 4 வளரிளம் பருவ தொழிலாளா்கள் மீட்பு
ஒசூரில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் பணியாற்றிய 4 வளரிளம் பருவத் தொழிலாளா்களை தொழிலாளா் துறையினா் மீட்டனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி தொழிலாளா் துணை ஆய்வாளா் ந.மாயவன் தலைமையில், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ப.சிவமூா்த்தி, முத்திரை ஆய்வாளா் ப.அன்னபூரணி, தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க உதவி இயக்குநா் நா.ஹரிணி, ஒசூா் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழ்மணி, தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளா் டி.சென்னம்மாள், தலைமைக் காவலா் அருண் பொன்மணி ஆகியோா் ஒசூா் நகரில் ஜன. 27-ஆம் தேதி ஆய்வுப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, ஒசூா் நகரில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 வளரிளம் பருவத் தொழிலாளா்களை மீட்டனா்.
குழந்தைத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-இன்படி 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, குழந்தைகளை பணிக்கு அமா்த்த வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

