ராசிபுரம் நகரில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதைத் தடுக்கும் வகையில், வீட்டுக் குடிநீர்க் குழாய்களில் வால்வு பொருத்தும் பணிக்கு பொதுமக்கள் சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராசிபுரம் நகரில் குடிநீர் இணைப்புகளுடன் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதைத் தடுக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் உள்ள குடிநீர்க் குழாய்களில் வால்வு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதை பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், 21-ஆவது வார்டில் வால்வு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்ததும் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்ரமணியம், ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.ராஜூ உள்ளிட்டோர் அங்கு சென்று பொதுமக்களை சமரசப்படுத்தினர்.
நாமக்கல், கொமாரபாளையம், திருச்செங்கோடு பகுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட குழாய்கள் நல்ல முறையில் இயங்குவதாகவும், இதனால் எந்தப் பாதிப்பும் வராது எனவும் தெரிவித்தனர்.
இதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வால்வு பொருத்தும் பணிகள் மீண்டும் நடைபெற்றன.