மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை வகித்தார். மல்லசமுத்திரம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜலகண்டேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை கணித ஆசிரியர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். ஊர்வலம் மல்லசமுத்திரம் வட்டார வளமைய அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் காளிபட்டி, சூரியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜலகண்டேஸ்வரன் கூறியது:
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், புற உலக சிந்தனை குறைபாடு உடைய குழந்தைகள், காது கேளாதோர், பார்வைக் குறைபாடு உடையோர், உடல் இயக்க குறைபாடு, பேச்சுத் திறன் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இறுக்க குறைபாடு, அன்னபிளவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைகளுக்கென இந்த முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அட்டை வழங்கப்படும். உதவி உபகரணங்கள் வழங்குதல், பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவிதொகை பெற பெயர்கள் பதிவு செய்யப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான உதவிகள் செய்து தரப்படும். முகாமில் பங்கேற்க பயனாளிகள் குடும்ப அட்டை நகல்-2, தேசிய அடையாள அட்டை நகல்-2, பாஸ்போர்ட் அளவில் புகைப்படம்-2 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.