பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அரசுப் பணியில் மருத்துவர்கள் சேருவது குறைந்து விடும் என்றார் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன்.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் எனக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் 3-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன் தலைமையில் புறநோயாளி சிகிச்சை பிரிவில் 2 மணிநேர பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் லீலாதரன், செய்தி தொடர்பாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, அன்புமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தைத் தொடங்கி வைத்து சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன் பேசியது:
கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஏற்கெனவே 50 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்து விடுகிறது. மீதம் உள்ள 50 சதவீத இடங்களில் பாதி இடங்களை மட்டுமே அரசு மருத்துவர்களுக்குக் கொடுத்து வருகிறது.
அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த இடஒதுக்கீடு காரணமாக கிராமப் புறம் மற்றும் மலைவாழ் பகுதிகளில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டி அரசுப் பணியில் சேருகின்றனர். இந்த இடஒதுக்கீடு இல்லை என்றால் அரசுப் பணியில் மருத்துவர்கள் சேருவது குறைந்து விடும்.
கிராமப் புற, மலைவாழ் பகுதிகளில் மருத்துவ சேவை குறைந்து விடும். இதனால் அந்த மக்களின் நலன் மற்றும் அரசு மருத்துவர்களின் நலன் கருதி தமிழக அரசு மருத்துவப் பட்ட மேற்படிப்பு 50 சதவீத இடஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் வழங்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.