காதலித்த பெண்ணை திருமணம் செய்ய கள்ளக் காதலியை மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் குமார் (29). துணி சலவை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜனனி (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜனனி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்கிறார்.
இவருக்கும் அருகில் உள்ள மற்றொரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்த சேலம் மாவட்டம், நெரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துகுமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாம். இதைத்தொடர்ந்து, கணவர், குழந்தையைப் பிரிந்த ஜனனி, முத்துக்குமாருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், முத்துக்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜனனியிடம் பேசி அவரை விட்டு விலக முடிவு செய்த முத்துக்குமார், ஜனனியை வியாழக்கிழமை காலை நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு 68ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே நின்று, ஜனனியிடம் தான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக முத்துக்குமார் கூறியுள்ளார். இதற்கு ஜனனி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மலைச்சரிவில் அவரை கீழே தள்ளி துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்ய முத்துக்குமார் முயற்சி செய்துள்ளார். இதில் ஜனனி மயக்கமடைந்ததால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
வியாழக்கிழமை இரவு மயக்கம் தெளிந்த ஜனனி, கூச்சல் போட்டுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் வாழவந்தி நாடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.