சபரிமலையில் சேவைப் பணிக்கு கல்லூரி மாணவர்கள் பயணம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்பான சேவைப் பணிகளில் ஈடுபட முதல்கட்டமாக 25 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
குமாரபாளையம் நாராயண நகர், அகிலபாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும், சபரிமலைச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் கல்லூரி மாணவர்களை அனுப்பி வைத்து வருகிறது. தற்போது சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் சேவைப் பணிகளுக்கு மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி குமாரபாளையத்தில் அம்மன் நகர் ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் என்.ஜெகதீஷ், சபரிமலையில் மாணவர்கள் செய்ய வேண்டிய பணிகள், வழிமுறைகள், மூலிகைக் குடிநீர் விநியோகம், பக்தர்கள் மலை ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், பக்தர்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முதல்கட்டமாக திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் சேவைப் பணிக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கேசவமூர்த்தி, மணிகண்டன், மனோகரன், மூர்த்தி, குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.