பரமத்தி வேலூரில் கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு
பரமத்திவேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் வரத்து அதிகரித்ததோடு கூடுதல் விலைக்கு ஏலம் போனது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை பரமத்திவேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டு வருகின்றனர்.
அங்கு தரத்துக்கு தகுந்தவாறு மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் 262 கிலோ கொப்பரை ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 126.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 114.79-க்கும், சராசரியாக ரூ.123.19 }க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ. 28 ஆயிரத்து 298-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,080 கிலோ கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 128.15-க்கும், குறைந்த பட்சமாக ரூ.122.90-க்கும், சராசரியாக ரூ.125.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 98 ஆயிரத்து 946-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரைத் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதோடு விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.