பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் வரத்து குறைந்துள்ளதால், கொப்பரைத் தேங்காயின் விலை உயர்ந்துள்ளது.
பரமத்தி வேலூர் வட்டத்தில் சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டு வந்து, தரத்துக்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 2,109 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.70.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.65.89-க்கும், சராசரியாக ரூ.63.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 570 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுமார் 1,807 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.70.59 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ.65.90 பைசாவுக்கும், சராசரியாக ரூ.67.89 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 373 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கொப்பரைத் தேங்காயின் வரத்து குறைந்திருந்ததால், கொப்பரைத் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.