பரமத்தி வேலூர் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பரமத்தி வேலூர் காவிரியாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர் நகர பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பரமத்தி வேலூர் நகர பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். கபிலர்மலை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியச் செயலர்கள் விஜயகுமார், மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இப் பகுதியில் உள்ள நன்செய் நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளை காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் மேம்படவும், உயரவும், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும். சேலத்தில் இருந்து மதுரை செல்லும் அனைத்து பேருந்துகளும் வேலூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். அவ்வாறு வந்து செல்லாத பேருந்துகள் சிறை
பிடிக்கப்படும்.
கடுமையான வறட்சியால் காய்ந்து வரும் தென்னை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
பழைய தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கும் வகையில், சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். வேலூர் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.
இதில், நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் சரவணன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட இளைஞர் அணி செயலர் செந்தில், தலைவர் பிரபாகரன் மற்றும் மாவட்ட துணைச் செயலர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மோகனூர் மேற்கு ஒன்றியச் செயலர் சதாசிவம் நன்றி கூறினார்.