குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, அரசு கூடுதல் முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை வகித்துப் பேசியதாவது : டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அரசு அலுவலர்கள் மனித நேயம், மக்கள் தொண்டு நோக்குடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். தொடர்ந்து அடுத்த இரு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பை முறைப்படுத்த குழுவை அமைக்கவும் அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கண்காணித்து போதுமான அளவில் குளோரின் கலக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும், இதுகுறித்த விவரங்களை அரசுச் செயலருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.