வன உயிரின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் இறதியாண்டு பி.ஏ. ஆங்கில பாடப் பிரிவு மாணவி ஈ.பிரதீபா மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவருக்கு சென்னையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றினை வழங்கினார்.
மாணவி ஈ.பிரதீபாவுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பி.கே.செங்கோடன் தலைமை வகித்தார். செயலர் கே.நல்லுசாமி, டிரினிடி அகாதெமி தலைவர் டாக்டர் ஆர். குழந்தைவேல் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
மேலும், நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளில் 3 ஆம் இடம் பிடித்த கல்லூரி மாணவிகள் எம்.காயத்ரி, கே.கே. கிருத்திகா மற்றும் எம்.பி. செளம்யா ஆகியோருக்கும் இந் நிகழ்வில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் பி.செல்வி, நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் உட்பட ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.