குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் வேலுதேவன் தொடக்கி வைத்தார்.
நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊர்வலம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, மேற்கு காலனி வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
தொடர்ந்து, நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியர் மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்புக் குடிநீரை விநியோகம் செய்தார். ஊர்வலத்தில், டெங்குவைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட தட்டிகளை ஏந்தியபடி ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சென்றனர்.
மேலும், ஊர்வலத்தில் விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், குமரவேல், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.