நாமக்கல் முதலைப்பட்டி அருகே தனியார் நிதிநிறுவன மேலாளர் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாமக்கல் முதலைப்பட்டி வி.ஐ.பி.நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (38). இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு சஞ்சய்குமார் (12) என்ற மகன் உள்ளார். விஜயலட்சுமி வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் வேலை முடிந்து இரவு 7 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், நல்லிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் அங்கு வந்த நல்லிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வையாபுரி என்பவர் வீட்டிலும் 10 பவுன் நகைகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இரு திருட்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் நல்லிபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.