பரமத்திவேலூர் அருகே பொய்யேரி பகுதியில் மழை வேண்டி பொதுமக்கள் மழைச் சோறு எடுக்கும் வினோத வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தெருத்தெருவாக சென்று மழைச்சோறு வாங்கினர்.
கோடை தணிந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழைப் பெய்து வந்தாலும் காவிரி கரையை ஒட்டியுள்ள பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை இன்றி விளைநிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளம், குட்டைகளிலும் தண்ணீர் இல்லை.
இந்த நிலையில் மழை வேண்டி பரமத்தி வேலூர் அருகே பொய்யேரில் மழைச்சோறு எடுக்கும் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெண்களும், பெண் குழந்தைகளும் வீடு வீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து அந்தப் பகுதியில் உள்ள காளியம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதில் பொய்யேரி மற்றும் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மழைச்சோறு எடுத்தனர்.