நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பில், கணித ஆராய்ச்சி மையத் துவக்க விழா மற்றும் கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குக் கல்லூரி முதல்வர் லீலா குளோரிபாய் தலைமை வகித்தார். கணிதத் துறைத் தலைவர் கணேசன் வரவேற்றார். விழாவுக்கு சேலம் பெரியார் பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கணித ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பற்றிய குறும்படம் மாணவர்களுக்குக் காட்டப்பட்டது. விழாவில் காங்கேயம் அரசு கல்லூரி கணிதப் பேராசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்திருந்தார்.