பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் அரசினர் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியியல் மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்டங்களுக்கு இடையிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில் சிறந்த 30 ஆய்வுகள் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நாமக்கல் மாவட்ட அளவில் பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் ராகினி ,தேவி ஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வரும் டிசம்பர் மாதம் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் ஆகியோர்
பாராட்டினர்.
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், வழிகாட்டி ஆசிரியை செல்வமெர்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பொருளாளர் ரகோத்தமன் ஆகியோரும்
பாராட்டினர்.