ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் அல்லது கட்சி தொடங்கும் தேதி வெளியாகும் என அவரது சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்ற புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவர் நண்பர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் அல்லது கட்சி தொடங்கும் தேதி அப்போது அறிவிக்கப்படும். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டில் சம்பிரதாயத்தை மாற்ற முடியாது. கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும். தீர்ப்பை மறுபரீசிலனை செய்து நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளிக்க வேண்டும் என்றார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர் டி. அரங்கண்ணல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதையடுத்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.