7-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் சண்முகராஜன் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச்செயலர் தண்டபாணி, மாவட்டத் தலைவர் நவலடி ஆகியோர் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
ஊதியக்குழு ஒரு நபர் குழுவின் தலைவர் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தன் அறிக்கையை விரைந்து அளிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் அக்டோபர் 4-ஆம் தேதி நடத்தும் சிறு விடுப்புப் போராட்டம், நவம்பர் 27-ஆம் தேதி நடத்தும் காலவரையற்ற போராட்டங்களில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கலந்து கொள்ளாது.