கொல்லிமலை அடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஆம்பூத்து வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாட மர்ம நபர்கள் வந்து செல்வதாக மாவட்ட வன அலுவலர் ரா.காஞ்சனாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனவர் தமிழ்வேந்தன், வனக் காப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், சுகுமாரன், அன்பரசு, மோகன்குமார் ஆகியோர் திங்கள்கிழமை காலை கொல்லிமலை கொண்டாங்கால் கருப்பு கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சிலர் வன விலங்குகளை வேட்டையாட கண்ணி வைத்து காத்திருந்தனர். அவர்களை வனத் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆலத்தூர் நாட்டைச் சேர்ந்த முருகேசன்(35), அரியூர்நாடு எல்லைக்கிராய்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி (44), கெளதம் (23) என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வனஅலுவலர், அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.