நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே திங்கள்கிழமை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கிளீனர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி சிறுவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராசிபுரத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் வேன், சேந்தமங்கலத்திலிருந்து, 40-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு ராசிபுரம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது.
பேளுக்குறிச்சியை அடுத்த வெள்ளகணவாய்ப் பகுதியில் வேன் சென்றபோது வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த கிளீனர் சதீஷ்குமார் வேனில் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் ஓட்டுநர், பள்ளி சிறுவர்கள் என சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத்தம்கேட்டு வந்த அப் பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகா ஆனந்த் சென்று விசாரணை நடத்தினார். பேளுக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.