அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.2.45 லட்சத்தை பறிமுதல்
செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாடுமுழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பையில் உள்ள பி.எஸ்.கே. குழுமத் தலைவர் பெரியசாமி வீடு, அலுவலகம், நாமக்கல்-சேலம் சாலை தெருவில் உள்ள அவரது உறவினரும், ஆர்.பி.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளருமான செல்வகுமார், சம்பந்தி சண்முகம் ஆகியோர் வீடு உள்பட ஐந்து இடங்களில் வருமான வரித் துறையினர் மூன்று நாள்களாக சோதனை நடத்தினர். இச்சோதனை முடிவில் ரூ.14.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அதிமுக பிரமுகர் பாலு (எ) பாலுசாமியின் வீடு மற்றும் கடையில் திங்கள்கிழமை பிற்பகல் வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
மாலை 6 மணி வரை நீடித்த இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.2.45 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.