பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகளை திருடியதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கலியனூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரின் வீட்டில், கடந்த மார்ச் 13-ஆம் தேதி நகைகள் திருட்டு போனது. அதேபோல, குமாரபாளையம் அமிர்தா நகரில் செல்வராஜ் என்பவரின் வீட்டில், ஏப்ரல் 9-ஆம் தேதி சுமார் 7 பவுன் நகை திருடப்பட்டது. மேலும், குமாரபாளையம் பிரிவு சாலையில் மே 6-ஆம் தேதி, சண்முகம் என்பவரின் வீட்டில் 5 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. மேலும், எலச்சிப்பாளையம் பருத்திப்பள்ளி கோவிந்தன் என்பவரின் வீட்டில், ஜூலை 5-ஆம் தேதி 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பள்ளிபாளையம் - சேலம் சாலையில், சின்னார்பாளையம் வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்படையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த கரூர் மாவட்டம், குளித்தலை ஆச்சம்பட்டியைச் சேர்ந்த ரத்னகுமார் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், பள்ளிபாளையம், குமாரபாளையம், எலச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 32 பவுன் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர், ரத்னகுமாரை கைது செய்த போலீஸார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ் வழக்கில் விரைந்து செயல்பட்ட பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான தனிப்படையினரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.