விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2 - ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, இந்து முன்னணி சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 2 - ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில், நாமக்கல், கொல்லிமலை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, வையப்பமலை, பரமத்தி வேலூர், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை, பாலப்பட்டி மற்றும் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை அமைக்க இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ரசாயனப் பொருள்கள் கலக்காமல் களிமண், கிழங்கு மாவுகளைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரட்டை குதிரை, எலி, தாமரை, யானை, அன்னப்பறவை, காமதேனு ஆகியவற்றின் மீது அமர்ந்துள்ள விநாயகர் சிலைகள், சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் சிலைகள், சித்தி புத்தி விநாயகர் சிலைகள், மயில், ஆஞ்சநேயர் மற்றும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். 3 அடி முதல் அதிகபட்சமாக 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, ரசாயனம் கலக்காத வர்ணங்கள் பூசப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் கோபிநாத் தெரிவித்தார்.