திருச்செங்கோடு அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், அவரது ரூ.1.45 லட்சத்தை ஒப்படைத்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செங்குந்தர் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே, திங்கள்கிழமை இரவு, உலகப்பம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மூர்த்தி (எ)கண்ணன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கிக் கிடந்தார். அவ்வழியாக சென்ற திருச்செங்கோடு புறநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயராஜ், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் முதல்நிலைக் காவலர் சிவக்குமார் ஆகியோர் அவரை துரிதமாக மீட்டு, முதலுதவி செய்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூர்த்தி வந்த இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 170, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. அதனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூர்த்தியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு புதன்கிழமை பாராட்டினார்.