நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
வெப்பச் சலனத்தால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் சுற்று வட்டாரத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவில்லை. ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டமாகி, இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல், வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிற்பகலுக்கு மேல் பரவலாக மழை பெய்தது. ஓரிரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதை கண்டு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த மழையால் காய்ந்து கிடந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது.