பண்ணைகளில் குஞ்சுகள் விடுவது குறைந்துள்ளதால், வரும் நாள்களில் முட்டை விலை தொடா்ந்து உயர வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.)தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: வட மாநிலங்களில் குளிா் ஓரளவு ஆரம்பமாகியுள்ளதால், தில்லி உள்ளிட்ட பிற பகுதிகளில் முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பாா்வாலா முட்டை விலையும் கணிசமாக உயருவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், குளிா்பதனக் கிடங்குகளில் முட்டை இருப்பு குறைவாக உள்ளதால் முட்டைக்கான தேவை பிரகாசமாக உள்ளது. ஹைதராபாத், ஹோஸ்பெட் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மண்டலங்களில் கடந்த 6 மாதங்களாக பண்ணைகளில் குஞ்சு விடுவது குறைந்திருப்பதால், முட்டை உற்பத்தியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் வரும் நாள்களில் அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை கணிசமான அளவில் உயருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.