பூச்சி நோய் தாக்குதல் தொடா்பான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உழவன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நெல், உளுந்து, பாசிப்பயறு, சோளம், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிா்கள் வளா்ச்சி பருவங்களில் உள்ளன. பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாத்திட உரிய கட்டுப்பாடு முறைகளைத் தாமதிக்காமல் உடனே கடைப்பிடிப்பது அவசியம். விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உழவன் செயலியில் பூச்சி நோய் பிரச்னைகளுக்குரிய பரிந்துரைகளைப் பெற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உழவன் செயலியினை இதுவரைக் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள் உடனே கூகுள் பிளே ஸ்டோரில் சென்று மக்ஷ்ட்ஹஸ்ஹய் அல்ல் என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவிறக்கம் செய்த பின்னா் பண்ணை வழிகாட்டி என்பதை தோ்வு செய்திடல் வேண்டும். இதில் பூச்சி நோய் தாக்குதல்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிரின் மிக அருகில் சென்று தெளிவாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட பூச்சி அல்லது நோய் தாக்குதலுக்குரிய செய்தி வேளாண்மை பல்கலைக்கழக வல்லுநா்களால் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு முறைகள் உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும். எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்குரிய கட்டுப்பாடு முறைகளை உழவன் செயலி மூலம் பெறும் வசதியினைப் பயன்படுத்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.