பரமத்தி வேலூர் அருகேயுள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேர்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 3-இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 4ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தினம்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், மாலை சுவாமி சிம்ம, ஹனுமந்த, கருட, சேஷ, யானை, புஷ்ப விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன்பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாகத் தேர் திருவீதி உலா வந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பல்லக்கு உற்சவமும், மாலை 3 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
பின்னர், புதன்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை வசந்த உற்சவமும்,வியாழக்கிழமை மாலை புஷ்ப யாகமும், வெள்ளிக்கிழமை மாலை கருட உற்சவமும் நடைபெறுகின்றன.